தமிழ்நாடு

புதுச்சேரி கடலில் ராட்சத அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

webteam

புதுச்சேரியில் கடலில் குளிக்கச் சென்ற பெங்களூரு இளைஞர் ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் கடலில் குளித்த பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர்கள் இருவரை ராட்ச அலை கடலுக்குள் இழுத்து சென்றது. சடலமாக ஒரு வாலிபர் மீட்கப்பட்டுள்ளார், மாயமான மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஹர்ஷித்குமார் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் பிரபுல் பாணி மாதவ் என்ற நண்பர் உட்பட 12 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். பின்னர் அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு விளையாடிய அவர்கள், முகத்துவாரம் பகுதியில் கடலில் குளித்துள்ளனர். கனமழை மற்றும் ஓகி புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் சீற்றத்துடன் உள்ளது கடல் சீற்றம் காரணமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஹர்ஷித்குமார், பிரபுல் பாணி மாதவ் உள்ளிட்ட 5 பேரை ராட்ச அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதைனைக் கண்ட கரையில் இருந்த மற்ற நண்பர்கள் கூச்சலிடவே அங்கிருந்த மீனவர்கள் விரைந்து சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ஹர்ஷித்குமார், பிரபுல் பாணி மாதவ் இருவரும் கடலில் மூழ்கினர். அதில் ஆபத்தான நிலையில் இருந்த ஹர்ஷித்குமாரை மீனவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபுல் பாணி மாதவ் கடலில் மாயமானார். மற்ற மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த ஹர்ஷித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதோடு கடலில் மாயமான பிரபுல் பாணி மாதவை மீனவர்கள், கடலோர காவல்படையினருடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.