தமிழ்நாடு

வீட்டின் அருகே விளையாடியபோது பரிதாபம் - மண்சுவர் விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

webteam

மதுரையில் வீட்டின் அருகே விளையாடிய இரண்டு குழந்தைகள் மண்சுவர் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள நாவினிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த தம்பதியினர் பிரேம்குமார் - தீபா. பிரேம்குமார் கூலி வேலை செய்து வரும் நிலையில், தீபா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர்களின் குழந்தைகளான மகாவிஷ்ணு (4), அஜிஸ்ரீ (2) ஆகியோர் தங்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டின் பின்பக்க மண்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதில் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே மூச்சுதிணறி உயிரிந்ததாக கூறப்படுகிறது. சுவருக்கு அடியில் குழந்தைகள் சிக்கியிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கு கூடியிருந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் வட்டாசியர் சிவகாமிநாதன் மற்றும் காவல்துறையினர், குழந்தைகள் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.