சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொபைல் போன்களை திருடி ஆந்திரா கிராமங்களில் குறைந்த விலைக்கு விற்று வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கிராமங்களில் சுற்றிவரும் ஒரு கும்பல் குறைந்த விலையில் செல்போன்களை விற்றுவந்துள்ளனர். திருட்டு கைப்பேசிகள் எனத் தெரிந்தும் குறைந்த விலைக்கு கிடைப்பதால் மக்கள் அவற்றை வாங்கி வந்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து, கூடூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் சென்னையில் செல்போன்களை திருடி ஆந்திராவில் விற்று வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 228 ஸ்மார்ட் போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த இரண்டு பேரையும் கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் 2 நபர்களை தேடி வருகின்றனர்.