தமிழ்நாடு

காதலருடன் சேர்த்துவைப்பதாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையை கடத்திய கும்பல்

webteam

கோவையில் அரசுப் பள்ளி ஆசிரியரை, அவரது காதலருடன் திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பணம் பறித்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பல்லடம் பகுதியை சேர்ந்த ஆசாத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து சசிகலா ஆசாத்திடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆசாத்தும் இதற்கு சம்மதித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி சசிகலாவை தொடர்பு கொண்ட மதன் என்பவர், தான் ஆசாத்தின் நண்பர் என்றும் அவருடன் திருமணம் செய்து வைக்கிறேன் எனவும் கூறியுள்ளார். உடனடியாக அவினாசி சாலையில் உள்ள பப்பிஸ் என்ற ஹோட்டலுக்கு அருகே வருமாறும் தெரிவித்துள்ளார். 

இதனை நம்பி சென்ற சசிகலாவை மதன் தனது நண்பர்களுடன் காரில் கடத்திச் சென்று சுமார் ஒரு லட்சம் வரை மிரட்டி வாங்கிக்கொண்டு பின்னர் ஏற்றிய இடத்திலேயே சசிகலாவை இறக்கி விட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சசிகலா திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் அபுதாஹிர் மற்றும் தஸ்தகீர் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.