தமிழ்நாட்டில் 1985இல் நடைபெற வேண்டிய சட்டமன்றத் தேர்தல் ஓராண்டுக்கு முன்பே நடைபெற்றது. 1984 அக்டோபர் 31ஆம் தேதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தனது பதவிக்காலம் முடிய ஓராண்டு இருந்த நிலையில் மக்களவை தேர்தலுடனேயே சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க முடிவெடுத்தார் எம்ஜிஆர். அப்போது அவர் சிறுநீரக கோளாறு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெறச்சென்றிருந்தார். இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமைந்த நிலையில் மறுமுனையில் திமுக, ஜனதா, இடதுசாரிகள் இணைந்து தேர்தலை சந்தித்தனர்.
எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றாலும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டார். அங்கிருந்தவாறு வாக்குகேட்டு வீடியோ வெளியிட்டார் எம்ஜிஆர். புரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படங்களும் தெருக்கள்தோறும் ஒட்டப்பட்டன. இந்திரா காந்தி இறந்ததால் ஏற்பட்ட அனுதாப அலை, எம்ஜிஆர் உடல் நலக்குறைவு குறித்த அனுதாபம் சேர்ந்து பெரும் அலை தேர்தலில் வீசியது. அதிமுக 155 தொகுதிகளில் போட்டியிட்டு 132இல் வெற்றிபெற்றது. திமுக 176 தொகுதிகளில் போட்டியிட்டு 24 இடங்களில் மட்டுமே வென்றது. எம்ஜிஆர் ஆண்டிபட்டி தொகுதியில் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். ஆனால் இதுவே அவர் சந்தித்த கடைசி தேர்தலாக அமைந்துவிட்டது.
திமுக தலைவர் மு.கருணாநிதி சட்டமேலவை உறுப்பினராக இருந்ததால் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் தீவிர அரசியலுக்கு வந்தபின் போட்டியிடாத ஒரே தேர்தல் இதுதான். திமுக இளைஞரணி செயலாளராக இருந்த மு. க.ஸ்டாலின் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை 1984இல்தான் சந்தித்தார். அப்போது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஏ. கிருஷ்ணசாமியிடம் அவர் தோல்வியடைந்தார். தொடர்ந்து 3ஆவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை ஏற்றார் எம்ஜிஆர். காமராஜருக்கு பிறகு தொடர்ச்சியாக 3 முறை முதல்வர் பதவியில் அமர்ந்த ஒரே அரசியல் தலைவர் என்ற பெருமையை பெற்றார் எம்.ஜி.ஆர்.