TN election x page
தமிழ்நாடு

1952இல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தல்.. பின்னணி என்ன? வெற்றி பெற்றது யார்?

தமிழ்நாட்டில் இதுவரை 16 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

PT WEB

தமிழ்நாட்டில் இதுவரை 16 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்தலும் எந்தப் பின்னணியில் நடைபெற்றது என்பதைப் பார்க்க இருக்கிறோம். இதில் முதலாவதாக 1952இல் நடந்த முதல் தேர்தல் குறித்து தற்போது பார்ப்போம்.

சுதந்திரம் அடைந்தபின் முதல் தேர்தல்1952இல் நடைபெற்றது. இப்போதைய தமிழ்நாடு அப்போது மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரில் இருந்தது. தற்போதைய தமிழ்நாட்டின் பெரும்பகுதி மெட்ராஸ் மாகாணத்தில் இருந்தது. இப்போதுள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களின் சிறுபகுதிகளும் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்தன.

திமுக கொடி

மொத்தம் 375 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 66 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகள். அதாவது 66 தொகுதிகளில் பொது வேட்பாளர், பட்டியலின வேட்பாளர் என இருவர் தேர்வு செய்யப்படுவர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாணிக்கவேலரின் காமன்வீல் கட்சி, ராமசாமி படையாச்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, பி.டி.ராஜன் தலைமையிலான நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின. திராவிட முன்னேற்றக்கழகம் அப்போது உருவாகிவிட்டிருந்தாலும் போட்டியிடவில்லை. தங்கள் கொள்கையை ஆதரிக்கும் கட்சகள் என்ற அடிப்படையில் காமன்வீல் கட்சி, உழைப்பாளர் கட்சிகளுக்கு திமுக ஆதரவளித்தது.

அரிசி தட்டுப்பாடு,விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை ஆகியவை இத்தேர்தலின் பிரதான பேசுபொருட்களாக இருந்தன. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி வண்ணங்களில் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. 1952 ஜனவரி 2 முதல் ஜனவரி 25 வரை 9 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அக்கட்சி 152 இடங்களில் மட்டுமே வென்று பெரும்பான்மையை பெற தவறியது.

காமராஜர்

முதலமைச்சர் குமாரசாமி ராஜா, எம்.பக்தவத்சலம் உட்பட பல அமைச்சர்கள் தோல்வியடைந்திருந்தனர். 2 அமைச்சர்கள் மட்டுமே வென்றனர். எதிர்த்தரப்பில் இந்திய கம்யூனிஸ்ட் 65 இடங்களில் வென்றது. ஆட்சியமைப்பதில் குழப்பம் நிலவிய நிலையில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவியை வகித்துவிட்டு ஓய்வாக இருந்த ராஜாஜி மீண்டும் தீவிர அரசியலுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டார். பிற கட்சிகளின் ஆதரவுடன் ராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைந்தது. எனினும் குலக்கல்வி திட்டம் எழுப்பிய சர்ச்சையால் 1954இல் ராஜாஜி பதவி விலகினார். காமராஜர் முதல்வரானார்.