keeladi
keeladi pt desk
தமிழ்நாடு

கீழடியில் தோண்டத் தோண்ட வெளிப்படும் தமிழரின் நாகரிகம் - புதிதாக கண்டறியப்பட்டுள்ள 183 தொல்பொருட்கள்

webteam

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அகழாய்வுப் பணிகள் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் கீழடியின் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் 9 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் இந்த அகழாய்வு விரிவாக நடைபெற்று வருகிறது.

keeladi

இந்த அகழாய்வுப் பணியில், தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக்காய்கள், வட்டச்சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

keeladi

முதற்கட்டமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நான்கு அகழாய்வுக் குழிகளில் சுமார் 35 செ.மீ. ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்புக் கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைதளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தரைதளம் 3 முதல் 6 செ.மீ. தடிமனுடன் காணப்படுகிறது. தரைத் தளத்தின் கீழே சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்பு - சிவப்பு பூச்சு, மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள் குவியலாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும் துளையிடப்பட்ட பானை ஓடுகள், அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இப்பானை ஓடுகளை ஆய்வு செய்ததில் மீன், ஏணி மற்றும் வடிவியல் சார்ந்த குறியீடுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்காம் கட்ட அகழாய்வில் 10க்கு 10 மீ. என்ற அளவில் தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் இதுவரை 17 முதுமக்கள் தாழிகள் மூன்று நிலைகளில் கண்டறியப்பட்டுள்ளன.

keeladi

கீழடி அகழாய்வுகள் மூலம் தமிழனின் பழம்பெருமை தோண்டத் தோண்ட வெளிப்பட்டுக் கொண்டே இருப்பது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.