கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை திருவிழாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 18 பேர் படுகாயம் ஒருவர் பலி pt
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை திருவிழாவில் விபத்து| பெண் ஒருவர் பலி.. 18 பேர் படுகாயம்!

மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுதிருவிழாவில் பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

PT WEB

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற ஆற்றுதிருவிழாவில் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்புறம் ஹீலியம் பலூன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இரவு 7 மணியளவில் பலூன்களுக்கு ஹீலியம் நிரப்பும் போது சிலிண்டர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.

மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழா

இந்த விபத்தில் பலூன் விற்பனை செய்த ஏழுமலை உட்பட 16 க்கும் மேற்பட்டோர் கை கால்கள் சிதறிய நிலையில் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 16 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு சென்ற வேளியாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கலா என்பவர் இரண்டு கால்களும் துண்டான நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலூன் கடை உரிமையாளரான ஏழுமலை உள்ளிட்ட 18 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர விசாரணையில் போலீஸார்..

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழா

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில், மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் பலூன் நிரப்புவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த கேஸ் சிலிண்டர் ஆனது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது, இதில் காயமடைந்தவர்கள் தற்போது வரை திருவண்ணாமலை மருத்துவ மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கலா எனும் பெண் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழா

தொடர்ந்து இது போன்ற சிலிண்டர்களுக்கு உரிமம் உள்ளதா என்ற செய்தியாளர் கேள்விக்கு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விசாரணைக்கு பின்னரே அது குறித்து தெரியவரும் என்றார். எதிர்வரும் ஆற்று திருவிழாவில் இதுபோன்ற விபத்து ஏற்படுத்தக்கூடிய சிலிண்டர்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு விசாரணைக்கு பின்னரே தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

சம்பவ இடத்தில் தடவியல் நிபுணர்கள்..

விழுப்புரத்திலிருந்து தடவியல் நிபுணர் ராஜீவ் தலைமையிலான தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு வெடித்து சிதறிய ஹீலியம் சிலிண்டரின் உதிரி பாகங்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த ஹீலியம் சிலிண்டர் வாயு கசிவு காரணமாக விபத்துக்குள்ளானதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழா

தொடர்ந்து விபத்துக்குள்ளான இடத்தில் ஒரு ஹீலியம் சிலிண்டர் வெடித்து சிதறிய நிலையில் அருகில் இருந்த மற்றொரு ஹீலியம் சிலிண்டரை குளிர்ச்சிபடுத்திய தீயணைப்பு துறையினர், அந்த சிலிண்டரில் இருந்த ஹீலியம் வாயு முற்றிலுமாக பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றி அங்கிருந்த அனைத்து விதமான பொருட்களையும் அப்புறப்படுத்தினர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மணலூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.