சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக அரசுக்கு எதிரான பரப்புரை உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக அரசுக்கு எதிரான பரப்புரை முன்னெடுப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தீர்மானங்களை வாசித்தார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் என்னென்ன என்பதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..
தீர்மானம் 1
பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கழகம், பாஜக-வுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு 2.5.2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது!
தீர்மானம் 2
வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது! கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K.பழனிசாமிக்கு இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது!
தீர்மானம் 3
(i) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலும், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையிலும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது!
கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்!
(il) சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் 'பஸ் போர்ட்' அமைக்க வலியுறுத்தல்!
தீர்மானம் 4
ஒவ்வொரு ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போதும், தொடர்மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, அதை பாதுகாப்பாக எதிர்கொள்வதிலும், மக்களை பாதுகாப்பதிலும் தோல்வி அடைந்துவருகிறது திமுக அரசு..
தீர்மானம் 5
ஜனநாயகத்திற்கு தேர்தல் பொன்மகுடம். மக்களாட்சி தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்குவது மக்களின் வாக்குரிமை. அந்த வாக்குரிமையை நிலைநிறுத்தும் எஸ் ஐ ஆரை அதிமுக வரவேற்கிறது. முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லுமுல்லுகளை நீக்கி தகுதியான வாக்காளர் பட்டியல்களை வெளியிட வேண்டும்.
தீர்மானம் 6
விவசாயிகள் விளைவித்த நெல்லை முறையாக கொள்முதல் செய்து வழிவகை செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுமென்று திமுக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. தானும் டெல்டா காரன் என்று தப்பட்டம் அடித்துக்கொண்டு விவசாயிகளுக்கு கண்ணீரைத் தந்து கொண்டிருக்கும் ஸ்டாலினுக்குக் கண்டனம்.
தீர்மானம் 7
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள்! இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழக இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள்! தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் பாட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் முதலமைச்சருக்கு கண்டனம்!
தீர்மானம் 8
தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்குக் கண்டனம்
தீர்மானம் 9
படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலை! கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வரும் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டும் தமிழக மக்களைத் தொடர்ந்து கடனாளிகளாக்கும் திமுக அரசுக்கு கண்டனம்!
தீர்மானம் 10
சட்டம்-ஒழுங்கு சரிந்து கிடக்கிறது! தொடரும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி காவல் துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் திமுக அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கடும் கண்டனம்!
தீர்மானம் 11
2021ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது! அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு ,சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ. 100 வழங்குதல்' போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் 'எல்லோருக்கும் எல்லாம்" என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகின்ற திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கண்டனம்!
தீர்மானம் 12
விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் வல்லவர்கள் திமுக என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. முதலமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று தொடங்கி மதுரை மேயர் ராஜினாமா என்கிற அளவுக்கு, ஊழல் சாம்ராஜ்யமாகத் திகழும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
தீர்மானம் 13
சமூக நீதியை காவு கேட்கும் திமுக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ் நாடே வெட்கித் தலைகுனிகிறது! ஜாதிகள் அற்ற சமத்துவத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது கொள்கைகளாகும்! இவற்றிற்கு மாற்றாக, பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும், திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருப்பதற்கு கடும் கண்டனம்!
தீர்மானம் 14
மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிய, தென்னக நதிகளின் இணைப்பு மற்றும் கோதாவரி-காவேரி இணைப்பையும், ஆனைமலையாறு-பாண்டியாறு புன்னம்புழா வரை திட்டத்தைத் தொடர்வதற்கு அக்கறை இல்லாமலும், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்தத் தவறியும், மேகதாது அணை கட்டுவதாகச் சொல்லும் நடவடிக்கைகளை தடுக்கத் தவறியும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தவறியும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தவறியும், உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை தமிழ் நாட்டிலேயே மிக நீளமான பாலத்தை 1,621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை, ஸ்டிக்கர் ஒட்டி தான் கொண்டுவந்ததாக திறப்பு விழா நடத்தி இருக்கும் திமுக அரசை, இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது!
தீர்மானம் 15
நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும். அதோடு, நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை; எதிர்பார்ப்பை இப்பொதுக்குழு பிரதிபலிக்கிறது! நீதித்துறைக்கே சவால்விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்கப்போக்கை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 16
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்!