தமிழ்நாடு

கோவை: கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் மீட்பு

Sinekadhara

கோவை சரவணம்பட்டி அடுத்த யமுனா நகர் பகுதியில் முட்புதரில் சாக்குமூட்டையில் கை கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த முட்புதரில் கிடந்த ஒரு கட்டப்பட்ட சாக்குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. சாக்கை அவிழ்த்து திறந்து பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடவியல் துறையின் உதவியோடு பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அது 15 வயது சிறுமியின் உடல் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும் கடந்த 11ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் உறுதிசெய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலுள்ள முட்புதரிலேயே சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், பிரேதத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.