ரமேஷ் -சேகர்பாபு Pt web
தமிழ்நாடு

சட்டப்பேரவை சர்ச்சை | குன்னூர் விநாயகர் கோயில்.. மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் ரத்து!

குன்னூரில் விநாயகர் கோவில் அருகில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டும் திட்டம் ரத்து - திமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கும் நிலையில், சட்டப்பேரவையின் இரண்டாம் நாளான நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அறநிலையத்துறையின் சொத்துக்கள் கோவில் பணிகளுக்கே பயன்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் கூறியிருக்கிறார்கள். இது, வலதுசாரி பாஜகவின் நோக்கமும் இதுதான். அதைதான் தவெகவும் பிரதிபலிக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ரமேஷ்

இதற்கு, பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அறநிலையத்துறையின் வருமானம் கோவில்களுக்காக, கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்காக செலவிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டப்படுவது தொடர்பான தொடங்கப்படாத பணிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. நாம் ஆராய்ந்த வரையில், பக்தர்களுக்கான கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தபடாமல் இருந்திருக்கிறது. எனவே, பல நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக அந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது.

கோயில்களில் கடந்த ஆட்சியில் வணிக நோக்கத்தில் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 500 பேர் வரக்கூடிய கோயிலுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ஏன்? கோயில் நிதியை கமர்சியலாக பயன்படுத்தியது ஏன்? கோவில்களை கமெர்சியலாக பயன்படுத்துவதற்கு எதிராக தான் அந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம், மக்களும் கோவில்களும் பயன்படும் வகையில், மாற்றுத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறது எனப் பேசினார்.

அமைச்சர் சேகர்பாபு

இதற்கு பதிலளித்த முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து அறசமயநிலைத் துறை கொடைகள் என ஒரு சட்டம் இருக்கிறது. அதில், விதி 69-ல் குறிப்பிபிடப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. நான் மட்டும் முடிவு செய்து திட்டங்களை கொண்டு வந்தது போல, ரமேஷ் பேசியிருக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் படியே, திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதேபோல, ஆய்வின் அடிப்படையில் தான் மல்டி லெவல் பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டது” என விளக்கமளித்தார்.

தொடர்ந்து, சேகர்பாபுவுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், குன்னூர் விநாயகர் கோவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பதற்கு, ஏற்கனவே நகராட்சி நிர்வாகத்திடம் நிலத்தைக் கொடுத்து அதிலிருந்து வரும் நிதியை கோவில்களுக்கு அடிப்படை வசதிகளை பயன்படுத்தலாம். ஆனால், கோவில் நிதி 10 கோடியை எடுத்து மல்டி லெவல் கார் பார்க்கிங் பொதுமக்கள் கேட்கவில்லை. பக்தர்கள் கேட்பது அடிப்படை வசதிகளை தான் என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு, குன்னூர் விநாயகர் கோவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டும் திட்டம் தமிழக அளவில் பேசுபொருளாகியிருந்தது. இந்தசூழலில் தான், திமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்ட குன்னூரில் விநாயகர் கோவில் அருகில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அடிப்படை வசதிகள் இல்லாத வருவாய் குறைந்த அளவில் இருக்க கூடிய இந்த திருக்கோயிலுக்கு மருதமலை திருக்கோயில் உபரி நிதியில் இருந்து வட்டியுடன் கூடிய கடனை பெற்று இந்த வாகன நிறுத்துமிடம் அமைக்க கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து இத்திட்டம் துவங்கப்படாத சூழலில் இருப்பதை கருத்தில் கொண்டு இதன் கட்டுமான பணிகளுக்கான ஆணையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.