தமிழ்நாடு

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்... கோட்டாட்சியர் உத்தரவுக்கு காரணம் என்ன?

நிவேதா ஜெகராஜா

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்றைய தினம் (24.03.2022) ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சிதம்பரம் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய, அனுமதி மறுக்கப்பட்டதால் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. `கனகசபையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்’ என்று ஒரு தரப்பும், `அனுமதிக்கக் கூடாது’ என மற்றொரு தரப்பும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. நிலைமையை சரிசெய்ய கோட்டாட்சியர் ரவி, ஒரு மாதத்திற்கு சிதம்பரம் நகரில் போராட்டங்கள் நடத்த 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு கனகசபை விவகாரம், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை சிதம்பரத்தில் கோவில் தொடர்பாக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவும், கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், பொதுமக்களின் நலன்கருதி 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்வதாக கோட்டாட்சியர் ரவி தற்போது அறிவித்திருக்கிறார்.