தமிழ்நாடு

சென்னை: ரயில் மீது ஏறி காத்தாடி பிடிக்க முயன்றதால் விபரீதம்; 14 வயது சிறுவன் உயிரிழப்பு

Sinekadhara

சென்னையில் ரயில்மீது ஏறி காத்தாடி பிடிக்க முயன்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன்நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசிம். 14 வயதான இவர், தனது நண்பர்களுடன் கடந்த 21-ஆம் தேதி தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் ரயில்வே யார்டில் காத்தாடி விட்டு கொண்டிருந்தபோது, நூல் அறுந்து ரயிலில் மேலுள்ள மின்சார கம்பியில் சிக்கியுள்ளது. உடனடியாக அந்த சிறுவன், பெட்ரோல் ஏற்றிவந்த கூட்ஸ் ரயிலில் ஏறி அதனை எடுக்க முயற்சி செய்தபோது, சிறுவனின் கை மின்சார ஒயரில் பட்டு தூக்கி வீசப்பட்டான்.

உடனடியாக சிறுவனை மீட்ட அப்பகுதி மக்கள், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.