தமிழ்நாடு

மேட்டூருக்கு 12 டி.எம்.சி. நீர் வரும் - மத்திய ஜல்சக்தி அமைச்சகம்

webteam

காவிரியில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வருவதால், மேட்டூர் அணைக்கு நாளொன்றுக்கு 12 முதல் 15 டி.எம்.சி. வரை நீர் வரக்கூடும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோல கிருஷ்ணசாகர் அணையிலிருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருந்தது. இதனால், அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

காவிரியில் அதிக அளவு நீர் வரும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகளவில் உள்ளதால் மூலக்காடு, கோட்டையூர், காவேரிபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்து வரும் 4 நாட்களில் மேட்டூர் அணைக்கு 12 முதல் 15 டி.எம்.சி. வரை நீர்வரத்து இருக்கும் ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.