தமிழ்நாடு

தஞ்சை: ஓடும் பேருந்தில் ஏறமுயன்ற 11ஆம் வகுப்பு சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

Sinekadhara

கும்பகோணம் அருகே அரியத்திடல் கிராமத்தில், ஓடும் பேருந்தில் ஏற முயன்ற 11ஆம் வகுப்பு மாணவன், நிலை தடுமாறி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

கும்பகோணம் அருகே அரியத்திடல் கிராமத்தில் உள்ள கற்பகம் நகரில் வசிக்கும் மறைந்த அமானுல்லா மகன் முகமது ஆதில் (16), கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளிக்கு செல்ல கிளம்பிய ஆதில், நரசிம்மபுரத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த நகர பேருந்து எண் 20இல் ஏற முற்பட்டுள்ளான். ஓடும் பேருந்தில் ஏற முயன்றபோது, எதிர்பாராவிதமாக நிலை தடுமாறி சாலையில் தவறி விழுந்ததில், அவன் பலத்த காயமடைந்தான்.

இதனையறிந்த பேருந்து ஓட்டுநர் பக்கிரிசாமி சமயோசிதமாக செயல்பட்டு, பயணிகளை இறக்கிவிட்டு முகமது ஆதிலை பேருந்திலேயே அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவன் முகமது ஆதில் பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் பூக்கொல்லை, அரியத்திடல் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது மாணவனின் உடல், உடற்கூறு ஆய்விற்காக அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.