10ஆம் வகுப்பு மாணவர்கள் - விஜய் web
தமிழ்நாடு

இன்று தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.. மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!

இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

Rishan Vengai

தமிழகத்தில் இன்று தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் மே 20 அன்று வெளியாகும். மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. இதில் மாநிலம் முழுவதும் 4ஆயிரத்து 219 மையங்களில் 9 லட்சத்து 9 ஆயிரத்து 397 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க 4 ஆயிரத்து 954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வின் முடிவுகள் மே20 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் வாழ்த்து..

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவருடைய எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.

உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துகள்!

நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!” என வாழ்த்தியுள்ளார்.