தமிழ்நாடு

சென்னையில் போலீஸ் தீவிர வாகன சோதனை : 100க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல்

webteam

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையின் நுழைவாயிலில் காரணமின்றி சுற்றித் திரிந்த 100க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையின் நுழைவாயிலாக உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டையில் வழக்கம்போல் வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன.

அதுமட்டுமின்றி ஏராளமானோர் காலாவதியான பாஸ்களை வைத்துக் கொண்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது விதிமுறைகளை மீறி வாகனங்கள் அணி வகுத்து வருவதால் போலீசார் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.