தமிழ்நாடு

சூரப்பா மீதான விசாரணை - மேலும் 10 நாள் அவகாசம்

சூரப்பா மீதான விசாரணை - மேலும் 10 நாள் அவகாசம்

Sinekadhara

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை குழுவுக்கு உயர் கல்வித்துறை மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா கடந்த 2018-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன.

இதில் துணைவேந்தருக்கும் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது. இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணையும் நடைபெற்று வந்த நிலையில், துணைவேந்தர் பணியிலிருந்து சூரப்பா ஓய்வு பெற்றார்.

இருப்பினும், விசாரணையைத் தொடர சிறப்புக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதன்பேரில், தற்போது சூரப்பா, பல்கலைக்கழக அதிகாரிகள், ஊழியர்கள், புகார்தாரர்கள் என அனைவரிடமும் விசாரணை நிறைவுபெற்றுள்ளது.

இந்நிலையில், நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு உயர் கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், சூரப்பா மீதான புகாரில் இறுதிக்கட்ட அறிக்கை தயார்செய்ய வேண்டியிருப்பதால் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. குழு எழுதிய இக்கடிதத்திற்கு உயர் கல்வித்துறையும் ஒப்புதல் அளித்துள்ளது.