தமிழ்நாடு

10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த மேலும் இரு வழக்குகள்: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த மேலும் இரு வழக்குகள்: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

kaleelrahman

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த மேலும் இரு வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம். பிரபு என்பவரும், பரவர் என்ற சமுதாயத்தின் சார்பில் என்.வளன்சந்திரா என்பவரும் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

டாக்டர் பிரபு தாக்கல் செய்திருந்த மனுவில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் உள் ஒதுக்கீடு வழங்குவதும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வித தகவலையும் வழங்காத நிலையில் உள் ஒதுக்கீடு வழங்குவதும் விதிகளுக்கு முரணானது என தெரிவித்துள்ளார்.

மீனவ கிராமங்களில் கோச்சிங் வகுப்புகளை எடுக்கும் வளன்சந்திரா தாக்கல் செய்துள்ள மனுவில் அரசு மற்றும் நீதித்துறையில் போதிய இடங்களை வன்னியர்கள் பெற்றுள்ளதாகவும், சமூகத்தில் அவர்களின் நிலை, கல்வித்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், வன்னியர்களின் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டதுடன், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகளுடன் பட்டியலிட அறிவுறுத்தி இரு வழக்குகளையும் ஒத்திவைத்தது.