தமிழ்நாடு

பக்கெட்டில் விழுந்து இறந்த ஒரு வயது குழந்தை.. விளாத்திகுளம் அருகே பரிதாபம்!

JananiGovindhan

குளியல் அறை வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்த பரிதாப நிகழ்வு விளாத்திகுளம் அருகே நடந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வாதலக்கரை கிராமத்தில் குளியல் அறை வாளியில் விழுந்து மாரிப்பாண்டியன் என்பவரது ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வாதலக்கரை கிராமத்தை சேர்ந்த மாரிப்பாண்டியன் மாரித்தாய் என்ற தம்பதியின் ஒரு வயது குழந்தை மகாலட்சுமி. நேற்று வீட்டில் மாரித்தாய் வீட்டு வேலைகளை பார்த்து கொண்டு இருந்துள்ளார். அப்போது குழந்தை மகாலட்சுமி விளையாடி கொண்டிருந்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் குழந்தை மகாலட்சுமி திடீரென காணமால் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து, மாரித்தாய் தேடி பார்த்த போது, அங்குள்ள குளியல் அறையில் இருந்த 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாளியில் குழந்தை தலைக்குப்புற கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டிருக்கிறார்.

இதையெடுத்து அவரது உறவினர்கள் குழந்தையை மீட்டு, விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் மாரித்தாயின் மகள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

இதை கேட்டதும் பெற்றோர் உள்ளிட்ட அனைவருமே அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் ஆளாகியிருக்கிறார்கள். இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாளியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.