சென்னை மாநகர பேருந்து தனியார் மருத்துவமனை சுற்றுச்சுவரில் உரசிச் சென்றதில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
திருவேற்காட்டில் இருந்து தியாகராய நகர் நோக்கி இன்று காலை மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் சிவன் கோயில் அருகே சென்றபோது அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தனியார் மருத்துவமனையின் சுற்றுச்சுவரில் உரசி நின்றது. இதில் படிக்கட்டில் பயணம் செய்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இதனால் சக பயணிகள் ஆவேசம் அடைந்ததை அடுத்து பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார். காயமடைந்த மாணவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சுபாஷ் என்ற மாணவர் மட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.