தமிழ்நாடு

”நீட் தற்கொலைகளுக்கு திமுக செய்யும் அரசியல்தான் காரணம்” - அண்ணாமலை காட்டம்

rajakannan

நீட் தேர்வினை நீக்க முடியாது, திமுக அரசு நீட் விவகாரத்தை கைவிட வேண்டும் எனவும், நீட் தற்கொலைகளுக்கு திமுக தான் காரணம் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தி நகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " நீட்டை வைத்து பாஜக அரசியல் செய்யவில்லை. 2016 , 2017 , 2018 ஆகிய ஆண்டில் ஆரம்பத்தில் நீட் தேர்வு ஏழுத கடினமாக தான் இருந்தது ஆனால் அது இப்போது சரி செய்யப்பட்டது. மாணவர்களின் கைகளையும் , கண்களையும் கட்டி வைத்துவிட்டு தமிழக அரசு எந்த பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்காமல் நீட் தேர்வினை எழுத வைக்கின்றனர் “ என்று கூறினார்.

மேலும், “நீட் தேர்வினை நீக்க முடியாது, திமுக அரசு நீட் விவகாரத்தை கைவிட வேண்டும். பள்ளி கல்வித்துறை அமைச்சரின் செயல்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர்களை தற்கொலைக்கு தூண்டுவது போல் உள்ளது. நீட் தற்கொலைகளுக்கு திமுக தான் காரணம். அடுத்து யார் தற்கொலை செய்வார்கள் போய் பார்க்கலாம் என்று ரேஞ்ச் ரோவர் காரில் உதயநிதியும், கனிமொழியும் ஓட்டமும் நடையுமாக செல்கிறார்கள்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 20,000 குறைந்துள்ளது. டெல்லி முதல்வரை இங்கே கொண்டு வந்து அவர்களது மாடலை இங்கு பயன்படுத்துகிறார்கள். தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலம், டெல்லி மாடல் இங்கு அவசியமில்லை” என்றார்.

”தொடர்ந்து ஆசிரியர்களை அரசியல்படுத்தி வைத்திருக்கிறது திமுக. என்னை தோற்கடிக்க அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்தது ஜாக்டோ ஜியோ. ஆனால் மாணவர்களின் சகிப்புத்தன்மை குறைந்திருப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வாய் திறப்பதில்லை” என்று அண்ணாமலை கூறினார்.