தமிழ்நாடு

“திருமணத்தில் ஆடம்பரம் இல்லை”: துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய புதுமணத் தம்பதி

“திருமணத்தில் ஆடம்பரம் இல்லை”: துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய புதுமணத் தம்பதி

PT

பொள்ளாச்சியில் எளிய முறையில்  திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினர்.

பொள்ளாச்சி ஜோதிநகர் ஏ காலனியை சேர்ந்த ஜோயல் ஆரோக்கியமேரி தம்பதியின் மகன் விக்டர் என்கிற நிர்மல். இவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை லியோனி லிடியாமேரி என்பவருக்கும் இன்றைய தேதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஆடம்பர திருமணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுளதால், இருவீட்டு உறவினர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். ஆடம்பரமாக நடக்க இருந்த திருமணம் எளிய முறையில் நடந்ததால் பெரும்பான்மையான திருமணச் செலவுகள் குறைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பின் தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணி வீரர்களாக களம் நிற்கும் துப்புரவு பணியாளர்களுக்கு மரியாதை செலுத்த நினைத்த புதுமணத் தம்பதிகள் 100க்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்களை அவரது இல்லத்திற்கு வரவழைத்து காலை விருந்தளித்தனர்.

மேலும்  ஒரு லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள்  மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும்  மணமக்கள் பணியாளர்களுக்கு வழங்கினர். நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டத் துப்புரவு பணியாளர்கள் மணமக்களை வாழ்த்தினர். ஆடம்பர செலவுகளை தவிர்த்து துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மன நிறைவுடன் இருப்பதாகவும் மணமக்களும் பெற்றோர்களும் தெரிவித்தனர்.