தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் இலவச சீருடை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் கைத்தறித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் இலவச சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை திட்டத்தை செயல்படுத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதத்திற்குள் புதிய வண்ணத்தில் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்வா க்ரீன் மற்றும் மெடோ க்ரீன் வண்ணத்தில் சீருடை வழங்கப்பட உள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு ஏற்கனவே சீருடை மாற்றப்பட்ட நிலையில், 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் சீருடை மாற்றப்படுகிறது. 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு லைட் பிரவுன் மற்றும் மெரூன் வண்ணத்திலான முந்தைய சீருடையே தொடர்கிறது.