தமிழ்நாடு

ஆதரவற்றவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் ’மை தருமபுரி’ தன்னார்வ அமைப்பு

sharpana

தருமபுரியில் ஆதரவற்றோர், ஏழைகள், மாணவர்கள், முதியவர்கள் என பலருக்கும் தினமும் மதிய உணவு வழங்கி வருகிறது ’மை தருமபுரி’ என்ற தன்னார்வ அமைப்பு.

தருமபுரியில் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறது ’மை தருமபுரி’ என்ற அமைப்பு. அதிக அளவு இளைஞர்களை தன்வசம் கொண்ட இந்த அமைப்பினர் ரத்ததானம், எளியோருக்கு உதவிகள் செய்தல், உணவு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவை பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது’ பசிக்குதா வாங்க சாப்பிடுங்க’ என்று பசித்த எளியோருக்கு உணவளிக்கும் உன்னத சேவையை  கடந்த ஏப்ரல் 14-ம் தேதி முதல் தொடங்கியுள்ளனர்.

தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி அருகில் இந்த சேவை பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தி வரும் இந்த அமைப்பினர் மதியம் ஒரு மணி அளவில் அவ்வழியில் வரும் ஏழை, எளிய ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்கின்றனர்.

முதலில் 10 பேருக்கு வழங்கியவர்கள் தற்போது 30 பேருக்கு வழங்கி வருகின்றனர். மேலும் உணவு முடிந்த பின் யாரேனும் வந்தால், அவர்களுக்கு மீண்டும் உணவை வாங்கி வந்து கொடுத்தனுப்புகின்றனர்.  தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இச்சேவை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இதற்காக விருப்பப்பட்டு பலரும் நன்கொடை வழங்க தொடங்கியுள்ளனர்.  தற்போது ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவு வழங்கக்கூடிய நிதியை தன்னார்வலர்கள் வழங்கியுள்ளனர்.