தமிழ்நாடு

`காசு ஓசினா போயிட்டு போயிட்டு வருவியா’- மூதாட்டியை தரக்குறைவாக பேசிய நடத்துனர்!

webteam

தஞ்சாவூரில் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம், `காசு ஓசி என்றால் பேருந்தில் போயிட்டு போயிட்டு வருவியா’ என நடத்துனர் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அதே பேருந்தில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்துள்ளார்.

இது குறித்து மூதாட்டியிடம் பேசும் நடத்துனர், “காசு ஓசி-ன்னா போயிட்டு போயிட்டு வருவியா?” என கேட்கிறார். இதற்கு அந்த மூதாட்டி காசு ஓசி என்று நான் போகவில்லை என்றும், “ஏன் தம்பி கோபமாக இப்படி பேசுகிறாய், நான் மாலை போட்டு உள்ளேன். கோபமா பேசுறேயே” என்றும் பரிதாபமாக கேட்கிறார். மேலும் “எங்கு ஏறுவது என்று எனக்கு தெரியாது. நான் புதுசாக இங்கு வந்திருக்கிறேன்” என்றும் கூறுகிறார். இந்த காட்சிகளை அங்கு இருந்த சகப் பயணி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த காட்சிகள் வெளியானதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர், மானங்கோரையை சேர்ந்த நடத்துனர் ரமேஷ்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.