தமிழ்நாடு

"மக்களை பாதிக்காத வகையில் கட்டண உயர்வு என்பது திமுகவின் அப்பட்டமான பொய்" - ஓபிஎஸ்

rabiyas

மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டண உயர்வு இருக்கும் என்பது திமுகவின் அப்பட்டமான பொய் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி திருமணத்தை சிறப்பித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், "மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டண உயர்வு இருக்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறாரே", இது குறித்த உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், பேருந்து கட்டண உயர்வு என்றாலே மக்களை கண்டிப்பாக பாதிக்கும், அதிலும் மக்களை பாதிக்காத வகையில் கட்டண உயர்வு இருக்கும் என்பது திமுக அரசின் அப்பட்டமான பொய் என்று தெரிவித்தார்.