தமிழ்நாடு

“Bye Bye Miss U Rummy” - ரம்மிக்கு அடிமையான இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை

webteam

ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் இழந்த பட்டதாரி வாலிபர் “Bye Bye Miss U ரம்மி” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அரசுப் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் பி.காம் படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் சுரேஷ் அவ்விளையாட்டிற்கு அடிமையாகி தொடர்ந்து ரம்மி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் 5 லட்சத்திற்கும் மேல் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ், “வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம், நண்பர்களிடம் வாங்கிய பணம் என அனைத்தையும் முழுமையாக ரம்மியில் இழந்து விட்டேன். ஆன்லைன் ரம்மியில் இருந்து மீள முடியவில்லை. Bye Bye Miss U ரம்மி” என கடிதம் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சுரேஷின் தந்தை விஸ்வநாதன் கூறுகையில் “தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது என்னுடைய மகனும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டாரன். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.