”யானைகளை கொடுமைபடுத்துபவர்களிடம் கருணை காட்டக் கூடாது எனவும், தனி நபரோ, கோவில் நிர்வாகமோ யானைகளை வைத்திருப்பதை தடுக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய யானைகளை பல ஆண்டுகளாக பராமரித்து வந்த இரு பாகன்கள் காரணங்கள் இன்றி வெளியேற்றப்பட்டதாகக் கூறி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய காரணங்கள் இன்றி பாகன்களை மாற்றியதால் யானைகளின் உடல்நிலை பாதிக்கப்படுவதாக மனுதாரர் தெரிவித்தார். இதனைக் கேட்ட தலைமை நீதிபதி, மேட்டுப்பாளையம் முகாமில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானைகள் சித்திரவதைபடுத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, “யானைகளை சித்திரவதை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களிடம் கருணை காட்டக்கூடாது” எனவும் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் தனியார் மற்றும் கோயில்களில் யானை வளர்க்கப்படுவதை தடுக்கும் வகையில் கொள்கை முடிவெடுக்க வேண்டுமெனவும் அரசிற்கு நீதிபதிகள் பரிந்துரைத்தனர். தொடர்ந்து யானை பராமரிப்பு குறித்த விதிமுறைகளை வகுத்து எட்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.