மலைவாழ் மக்கள் எளிய முறையில் மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காகவே நீலகிரியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது எனவும் விதிகளின் அடிப்படையில் அங்கு வெட்டப்படும் ஒவ்வொரு மரங்களுக்கும் பதிலாக தலா பத்து மரங்கள் நடப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன், நீலகிரியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டாமல், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீலகிரி மலைப்பகுதி என்பதால் அங்குள்ள மக்கள் எளிய முறையில் சிகிச்சை பெறவே அங்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பின்னரே அந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அங்குள்ள ஒரு சில மரங்கள் வெட்ட சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும் அனுமதி கிடைத்தவுடன் கட்டடங்களுக்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விதிகளின் அடிப்படையில் ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக பத்து மரங்கள் நடப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்