தமிழ்நாடு

தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்பமுயன்ற ரவுடி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த ஆய்வாளர்

webteam

மதுரையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தலைமை காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு காலில் காவல் ஆய்வாளர் பிடித்தார்.

மதுரை வளர்நகர் அருகே ராஜீவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 22ஆம் தேதி உலகனேரியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற டோராபாலா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து மாட்டுத்தாவணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் உட்பட 5 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் முதல் குற்றவாளியான பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரவுடியான உலகனேரியைச் சேர்ந்த வினோத் என்பவரை, சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் பதுங்கியிருந்த பகுதி குறித்து அடையாளம் காட்டுவதற்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது வினோத், திடீரென அங்கு பதுக்கி வைத்திருந்த அரிவாளால் முதல்நிலை காவலர் சரவணகுமாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் ராஜாங்கம் ரவுடி வினோத்தின் வலது காலில் துப்பாக்கி சூட்டுப் பிடித்தார். இதனையடுத்து காயமடைந்த ரவுடி வினோத், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல் துறையினரை வெட்ட முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.