விளையாட்டு

யுவராஜ் விளாசிய சிக்சர், ஷாக் ஆன பாக். பந்துவீச்சாளர்!

webteam

யுவராஜ் சிங் விளாசிய சிக்சரை கண்டு பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் சதாப் கான் வியந்து நின்றார்.

குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் கனடாவில் நடந்து வருகிறது. இதில், ஐபில் போல பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். நேற்று நடந்த போட்டியில் யுவராஜின் அணியும் டுபிளிசிஸ் தலைமையிலான எட்மோன்டோன் அணியும் மோதின. மழை காரணமாக ஒரு ஓவர் குறைக்கப்பட்டுப் போட்டி நடந்தது.

முதலில் ஆடிய எட்மோன்டோன் அணி 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்தது. அதிகப்பட்சமாக பென் கட்டிங் 24 பந்தில் 43 ரன் எடுத்தார். பின்னர் களமிறங்கிய டொரண்டோ நேஷனல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக அந்த அணியின் கிளாசன் 45 ரன்னும் யுவராஜ் சிங், 21 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரி களுடன் 35 ரன்னும் எடுத்தார். 

பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் சதாப் கான் வீசிய பந்தில், மிட் விக்கெட் திசையில் யுவராஜ் சிங் நேரான சிக்சர் ஒன்றை அடித்தார். இதைக் கண்டு சதாப் வியந்து நின்றுவிட்டார்.