ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை எளிதாக எடை போட வேண்டாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நவீனகால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் விராத் கோலிக்கு சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் கிடைக்கவில்லை. அவர் தலைமை தாங்கிய பெங்களூரு அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் அந்த அணி வெளியேறியது. இந்தநிலையில், கோலியின் ஃபார்ம் குறித்து மிஸ்டர் கிரிக்கெட் என்று புகழப்படும் மைக் ஹஸி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஹஸி, ஐபிஎல் தொடரின் பாதிப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த தொடர் முழுவதுமே புதிய சூழல் மற்றும் மைதானத்தில் நடைபெறுகிறது. கோலி போன்ற அபாயகரமான பேட்ஸ்மேனை குறைத்து மதிப்பிடும் அணிகள் ஆபத்தில் சிக்க நேரிடும். சிறந்த வீரரான அவர், இங்கிலாந்திலும் தனது முத்திரையைப் பதிப்பார் என்று தாம் நம்புவதாக ஹஸி கூறியுள்ளார்.