Sakshee Malik
Sakshee Malik Twitter
விளையாட்டு

“ஒரு சில வீரர்களுக்காவது உரிய மரியாதை கிடைக்கிறதே” - சிஎஸ்கே வெற்றி குறித்து சாக்‌ஷி மாலிக்!

Jagadeesh Rg

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், தன் ட்விட் பதிவில், "எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கேக்கு வாழ்த்துக்கள். குறைந்தபட்சம் சில விளையாட்டு வீரர்களாவது அவர்களுக்கு உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நீதிக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பாலியல் குற்றச்சாட்டில் உரிய நீதி கோரி டெல்லியில் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாய அமைப்புகள் , தனியார் அமைப்புகள் என பல தரப்பு இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தபோதிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வந்தனர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது புதிய நாடாளுமன்ற திறப்பின்போது நாடாளுமன்றத்தை நோக்கி இவர்கள் அனைவரும் பேரணியாக சென்றனர். அப்போது அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இப்படியான நிலையில் சிஎஸ்கே வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சாக்‌ஷி மாலிக், தங்களுடைய நீதிக்கான போராட்டம் தொடரும் என வேதனை கலந்த உணர்வுடன் பதிவிட்டிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.