விளையாட்டு

நாளை முதல் போட்டியில் ‘இங்கிலாந்து - தென்ஆப்ரிக்கா’ மோதல்

webteam

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள, 12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது.

உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 10 நகரங்களில் 11 மைதானங்களில் 48 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முந்தைய இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் 14 அணிகள் பங்கேற்ற நிலையில்,‌ நடப்புத் தொடரில் 10 அணிகள் மட்டுமே களம் காண்கின்றன. 

ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்‌தத் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடருக்கான நேரடி வாய்ப்பை பெற்றது. தரவரிசையின் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகள் தகுதி பெற்றன. 

வெஸ்ட் இண்டீஸ் ‌மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, உலகக்கோப்பை தொடருக்கு தகுதியாகின. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு உலகக்கோப்பையுடன் 28 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.