இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. அடுத்ததாக துவங்கிய 2வது டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓஷடா பெர்னாண்டோ, சண்டிமால், டிக்வெல்லா ஆகிய மூவரது அரைசதங்கள்; கேப்டன் கருணரத்னே, மேத்யூஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 378 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அகா சல்மான் அரைசதம் விளாச, இமாம் உல் ஹக் தவிர மற்ற அனைத்து வீரர்களும் 30 ரன்களை கூட எடுக்காமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, அந்த அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 147 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணியில் டாப் ஆர்டரில் ஒருவர்கூட 20 ரன்களை தாண்டாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மிடில் ஆர்டரிலும் விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்த போது அதை தடுத்து நிறுத்தியது கேப்டன் கருணாரத்னே- தனஞ்செயா டி செல்வா ஜோடி.
கருணாரத்னே அரைசதம் கடந்து நம்பிக்கை அளிக்க, தனஞ்செயா சதம் விளாசி அசத்தினார். இறுதியில் மென்டிஸ் தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் கைகொடுக்கவே, 360 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது இலங்கை அணி. இதையடுத்து 508 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் நான்காம் நாள் ஆட்டத்தில் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஆனால் அணியின் ஓப்பனர் வெறும் 16 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாக, மற்றொரு ஓப்பனர் இமாம் உல் ஹக்குடன் இணை சேர்ந்தார் பாபர் அசாம். நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களை குவித்துள்ளது பாகிஸ்தான்.
நாளை நடைபெறும் 5 ஆம் நாள் ஆட்டத்தில் 419 ரன்களை எட்டினால் பாகிஸ்தான் வெற்றி பெறும். எட்ட முடியாமல் போனாலும் இறுதிவரை களத்தில் இருந்தால் போட்டி டிரா ஆகும். இந்த இரண்டு நிகழ்விலும் தொடர் பாகிஸ்தான் வசம் தானாக வந்துசேரும். ஒருவேளை இலங்கை அணி பாகிஸ்தானை ஆட்ட நேரம் முடிவதற்குள் ஆல் அவுட் ஆக்கினால் இலங்கை வெற்றி பெறும். ஆனால் தொடர் கிடைக்காது. அது 1-1 என்ற கணக்கில் சமன் ஆகி விடும். என்ன நிகழப்போகிறது என்பது நாளைய ஆட்டத்தில் தெரிய வரும்.