ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இப்போது வரை போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறக போட்டிகளை செப்டம்பர் முதல் அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்ததது. இதனையடுத்து போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் போட்டிக்கு தயாராகும் வகையில் துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
விதிகளின்படி, அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். இந்தக் காலக் கட்டத்தில் அவர்கள் அடுத்தடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என்ற சோதனை முடிவை பெற்றபின் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விளையாட அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒருமாதக் காலமே இருக்கும் நிலையில் ஐபிஎல் அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி "போட்டி தொடங்கும் முதல் நான்கு நாட்களுக்கு வெளிநாட்டு வீரர்களின் வருகையை அதிகம் எதிர்பார்க்காது அணிகளிடையே போட்டி நடத்தப்படும். அப்போதும் வெளிநாட்டு வீரர்கள் வரவில்லை என்றால் போட்டி தொடர்ந்து நடத்தப்படும். இதெல்லாம் மனதில் வைத்து போட்டி அட்டவணை தயார் செய்யப்படும்" என பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் வீரர்களுக்கு எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை முடிவை பொறுத்தும் அட்டவணை தயார் செய்யப்படும். இவையெல்லாம்தான் தாமதத்திற்கான காரணம்" என கூறப்பட்டுள்ளது.