ஏப்ரல் - மே மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஜுரம் தொற்றிக்கொண்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம், அடுத்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் மினி ஏலம்தான். மினி ஏலம் நடைபெற்று வரும் நிலையில் அணிகள் தங்கள் தக்கவைப்பு வீரர்களையும், விடுவித்த வீரர்களையும் ஜனவரி 20-ம் தேதிக்குள் அறிவிக்க பிசிசிஐ கெடு நிர்ணயித்திருந்தது. எனவே ஐபிஎல்லின் 8 அணியின் நிர்வாகமும் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்பு பல வீரர்களை விடுவித்தது.
இதற்கு சிஎஸ்கே அணியும் விதிவிலக்கல்ல. சிஎஸ்கே அணியிலிருந்து மொத்தம் 6 வீரர்களுக்கு "குட்பை" சொல்லப்பட்டது. அதில் ஷேன் வாட்சன் கடந்த சீசன் முடிந்தவுடன் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டார். இதனையடுத்து 5 வீரர்களுக்கு நேற்று "எண்ட் கார்டு" போட்டது சிஎஸ்கே. அதில் ஹர்பஜன் சிங், முரளி விஜய், பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், மோனு சிங் ஆகியோரின் சிஎஸ்கே பயணம் முடிவடைந்தது. விலக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா தக்கவைத்துக்கொள்ளப்பட்டார்.
அதேபோல மூத்த வீரர் இம்ரான் கான் அணியில் தொடர்ந்து நீடிப்பது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இப்போது தோனி, ஜடேஜா, ரெய்னா, ஃபாப் டு பிளெசிஸ், சாம் கரன், டிவைன் பிராவோ, ஹேசல்வுட், லுங்கி இங்கிடி, ராயுடு, கரண் சர்மா, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், என்.ஜெகதீசன், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், ஆர்.சாய் கிஷோர் ஆகியோர் இருக்கின்றனர்.
இப்போது பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற இருக்ககும் ஐபிஎல் மினி ஏலத்தின்போது சிஎஸ்கே நிர்வாகத்தினரிடம் ரூபாய் 22.9 கோடி இருக்கும். இதனை வைத்து தகுதியான வீரர்களை புதிதாகவோ அல்லது வேறு அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முயற்சி செய்யும். இதில் வாட்சனுக்கு பதிலாக புதிதாக ஒரு ஆஸ்திரேலிய வீரரை தேர்வு செய்ய சிஎஸ்கே முனைப்புக்காட்டும் என கூறப்படுகிறது. அதில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் 2021 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து எடுத்துள்ளது சிஎஸ்கே. 35 வயதான ராபின் உத்தப்பா கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் ஆறாவது அணி. 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடி உள்ள உத்தப்பா 4607 ரன்களை ஐபிஎல் ஆட்டத்தில் குவித்துள்ளார்.
மேலும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவை வாங்கவும் ஆர்வம் காட்டலாம் என தெரிகிறது. ஹர்பஜனை விடுவித்ததால் அணியில் ஸ்பெஷலிஸ்ட் ஆஃப் ஸ்பின்னர் இல்லை. எனவே நல்ல சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரையும் சிஎஸ்கே சல்லடை போட்டு தேட வாய்ப்பு இருக்கிறது. மிக முக்கியமான வீரர் ஒருவரை வாங்க சிஎஸ்கே அணி ரூ.6 கோடி வரை செலவிட தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்தாண்டு சீசனில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும்விதமாக அணியை கட்டமைக்கு தோனி ஆர்வம் காட்டுவதாக சிஎஸ்கே நிர்வாக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ சிஎஸ்கே ரசிகர்களை பொறுத்தவரை இந்தாண்டும் தோனியை பார்க்கலாம், ரெய்னாவை ரசிக்கலாம், ஐபிஎல் திருவிழாவை ஆரவாரமாக கொண்டாடலாம் என்பதாகவே இருக்கிறது.