ஒரு காலத்தில், அசைக்க முடியாததாக இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கெத்து, கடந்த சில வருடங்களாக பொத்தென்று விழுந்திருக்கிறது, பரிதாபமாக! ‘எப்படியிருந்த நான், இப்படியாயிட்டேன்’ என்கிற விவேக் காமெடிதான் ஞாபகத்துக்கு வருகிறது.
ஐசிசி ஒரு நாள் தரவரிசை பட்டியலில் 6 வது இடத்துக்கு வந்திருக்கிறது அந்த அணி. முதல் நான்கு இடத்துக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த அந்த அணி, திடீரென இப்படியொரு சறுக்கலை சந்தித்திருப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியம்தான்! கடந்த 34 வருடங்களாக ஐந்துக்கு கீழே அந்த அணி இறங்கியதே இல்லை.
இங்கிலாந்தில் நடக்கும் போட்டிகளில் அடி மேல் அடி வாங்குகிறது ஆஸி. மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறது ஆஸி.க்கு எதிராக! ஒரு காலத்தில் பேட்ஸ்மேன்களை மிரட்டிய ஆஸ்திரேலிய பந்துவீச்சை சின்னா பின்னமாக்கி இருக்கிறார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். குறிப்பாக ஆண்ட்ரு டையின் பந்தை நொறுக்கித் தள்ளிவிட்டார்கள் கருணையே இல்லாமல்! ஒன்பது ஓவர்களில் நூறு ரன்களை விட்டுக்கொடுத்திருக்கிறார் அவர். மற்றவர்களும் 90 ரன்களை கொடுத்திருக்கிறார்கள். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆண்ட்ரு டைதான், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர். அவர் பந்துக்கே இந்த கதி!
என்னதான் ஆச்சு ஆஸி. கிரிக்கெட் அணிக்கு?
’கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் இருவரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருட தடையை அனுபவித்து வருகிறார்கள். இருவரும் ஆஸி.அணியின் தூண்கள். அவர்கள் அணியில் இல்லாதது மற்ற வீரர்களுக்கு மனரீதியான பாதிப்பைக்
கொடுத்திருக்கும். அந்த அணி சறுக்க இதுவும் காரணமாக இருக்கலாம். அதோடு முக்கியமான மூன்று பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசல்வுட் ஆகியோர் அந்த அணியில் இல்லாததும் காரணம்’ என்கிறார் முன்னாள் ஆஸி.வீரர் ஒருவர்.
ஸ்மித், வார்னர் ஆகியோர் அணியில் இருந்துமே சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாதியிலே வெளியேறியது. கடந்த வருடம் இந்திய தொடர், அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான தொடர், இங்கிலாந்து தொடர், தென்னாப்பிரிக்கத் தொடர் ஆகியவற்றை இழந்தது ஆஸி. அதனால் அவர்கள் இல்லாததற்கும் தோல்விக்கும் சம்பந்தமில்லை. அந்த அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் சிலர்.
’மார்க் வாஹ். ஸ்டீவ் வாஹ், மெக்ராத், வார்னர், கில்கிறிஸ்ட், ஹேடன், ஹஸி சகோதர்கள், பிரட் லீ, ரிக்கி பாண்டிங் என ஜாம்பவான் கிரிக் கெட் வீரர்கள் அணியில் இருந்தபோது, ஆஸி. அணியை கண்டாலே மற்ற அணி வீரர்கள் அலறுவார்கள். அவர்களின் பந்துவீச்சும் பேட் டிங்கும் மிரட்டும். ஆனால், இன்று அப்படியில்லை’ என்கிறார் மற்றொரு முன்னாள் வீரர்.
’இங்கிலாந்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தாலும் அதை மோசமான தோல்வி என்று பார்க்கவில்லை. ஆஸ்திரேலிய அணி யின் முக்கியமான மூன்று பந்துவீச்சாளர்கள் இல்லை. அதனால் தடுமாற்றம் இருக்கிறது. ஆனால் இதில் இருந்து ஆஸ்திரேலிய அணி
மீளும்’ என்கிறார் ஆஸி. அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல்.
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு அணி டாப்பில் இருக்கும். அதன்படி இங்கிலாந்து இப்போது டாப்பில் இருக்கிறது. அந்த அணியின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் மிரட்டுகிறது. அவ்வளவுதான். அடுத்து இந்திய அணி அங்கு விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்தி யாவுக்கும் இங்கிலாந்து அணி கடும் சவாலாகத்தான் விளங்கும் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
விராத் அண்ட் கோ என்ன செய்யப் போகிறதோ?