விளையாட்டு

“அடிலெய்ட் டெஸ்டில் செய்த தவறை திரும்பவும் செய்ய மாட்டோம்”-பகலிரவு டெஸ்ட் குறித்து புஜாரா

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக  24-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள டெஸ்ட் போட்டியில் விளையாட ஆயத்தமாகி உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. பகல் இரவு ஆட்டமாக இந்த போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் அடிலெய்ட் டெஸ்டில் செய்த தவறை திரும்பவும் இதில் செய்ய மாட்டோம் என இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். 

“ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நாங்கள் விளையாடியது முற்றிலும் மாறுபட்ட பகல் இரவு போட்டியாகும். அங்கு பந்து நன்றாக சீம் ஆனது. ஒரே ஒரு மோசமான செக்ஷனில் நாங்கள் செய்த தவறு  வீழ்ச்சிக்கு காரணமானது. இருந்தாலும் அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நாங்கள் நன்றாகவே விளையாடி இருந்தோம்.

ஆனால் இந்த போட்டியில் அப்படி இருக்காது. கண்டீஷன் தொடங்கி அனைத்தும் எங்களுக்கு பரிச்சயமானதுதான். நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த காலங்களில் நடந்தவற்றை திரும்பி பார்க்க வேண்டிய அவசியமில்லை. 

பகல் இரவு ஆட்டமாக இருந்தாலும் கேம் பிளான் எல்லாம் ஒன்றேதான்” எனத் தெரிவித்துள்ளார் புஜாரா. 

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை இரண்டு பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. அதில் வங்கதேசத்திற்கு எதிராக போட்டியில் வெற்றியும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியும் சந்தித்துள்ளது.