விளையாட்டு

ஐபிஎல் 2023: சென்னை வந்த தோனியை மலர்தூவி வரவேற்ற ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!

சங்கீதா

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி வருகிற 31-ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதற்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நேற்று சென்னைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு அணி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பும், ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

முதல்முறையாக மகளிர் அணிக்கான ஐபிஎல் போட்டிகள் நாளை துவங்கி வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து 16வது சீசன் ஆடவர் ஐபிஎல் போட்டி மார்ச் 31-ம் தேதி தேதி துவங்கி மே மாதம் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. போட்டி துவங்க இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே நாட்கள் உள்ள நிலையில், சிஎஸ்கே அணி தனது பயிற்சியை துவங்கும் பொருட்டு, அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை ரசிகர்கள் மலர்கள் தூவி வரவேற்றனர்.

மேலும், அங்கிருந்து நட்சத்திர விடுதிக்கு வந்த தோனிக்கு சென்னை அணி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தோனி மட்டுமின்றி, ரஹானே, பிரசாந்த் சோலங்கி, துஷர் தேஷ்பாண்டே உள்ளிட்ட வீரர்களும் தனித்தனியாக வந்திருந்தனர். அவர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், சென்னை அணி பயிற்சியை துவங்க உள்ளது.