விளையாட்டு

ஒருபக்கம் கோலி.. மறுபக்கம் சூரியகுமார்.. பரபரக்கும் இணையம்..!

ஒருபக்கம் கோலி.. மறுபக்கம் சூரியகுமார்.. பரபரக்கும் இணையம்..!

webteam

அபுதாபியில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 48வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்
விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் பவுலிங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது பெங்களூரு.
தொடர்ந்து மும்பை அணி 165 ரன்களை விரட்டியது. டி காக், இஷான் கிஷன், சவுரப் திவாரி, க்ருணால் பாண்டியா என மும்பை அணியின்
பேட்ஸ்மேன்கள் சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழக்க மறுபக்கம் விளையாடிய சூரியகுமார் யாதவ் மட்டும் பெங்களூரு பவுலர்களின் பந்து
வீச்சை பவுண்டரிகளுக்கு தெறிக்க விட்டார்.

43 பந்துகளில் 79 ரன்களை விளாசினார் அவர். அதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.19.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166
ரன்கள் எடுத்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வழக்கமான கிரிக்கெட் போட்டி என்றாலும், பெங்களூரு கேப்டன் விராட்
கோலிக்கும், சூரியகுமாருக்கும் இடையே நேற்றைய போட்டியில் பனிப்போர் நிலவியது. சூரியகுமார் அடித்த பந்தை தாவிப்பிடித்த விராட் கோலி
வேகமாக அவர் அருகில் வந்து இறுக்கமான முகத்தோடு நின்றார்.உடனே சூர்யகுமார் விலகி எதிரேயுள்ள பேட்ஸ்மேனுடன் பேசச் சென்றார்.

அதேபோல் வெற்றி பெற்ற பின்னர் சூர்யகுமார் யாதவ் நான் இருக்கிறேன் என்பது போல செய்கையை செய்தார். இந்நிலையில் கோலி மற்றும்
சூரியகுமார் ஆகியோர் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளனர். சூரியகுமார் போன்ற ஒரு இளைஞரிடம் அனுபவமிக்க வீரரான விராட் கோலி இப்படி
செய்யக்கூடாது என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் சூரியகுமார் அடித்த 70 ரன்களுக்கு இவ்வளவு சீன் தேவையா, விராட் 70 சதங்களுக்கு மேல் அடித்தவர் என்றும் ஒருதரப்பு பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே சூரியகுமார் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதனைக் குறிப்பிட்டும் இணையத்தில் போர் நடந்து வருகிறது.