விளையாட்டு

வெற்றியை உரக்க கத்தி கொண்டாடிய ‘ரிஷப் பண்ட் - தோனி மகள் ஜிவா’

rajakannan

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் மற்றும் தோனியின் மகள் ஜிவா இருவரும் உற்சாகமாக கத்தி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 140 ரன்கள் விளாசினார். பின்னர், 337 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 160 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்தது. மழைகுறுக்கிடவே 40 ஓவர்களில் 302 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணி 89 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை தொடரில் 7வது முறையாக வெற்றியை ருசித்தது.

நேற்று நடைபெற்ற போட்டியில், பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அதேபோல், வழக்கம் போல் தோனியின் மகள் ஜிவாவும் கலந்து கொண்டார். போட்டி நடக்கும் போதே மழை குறுக்கிட்ட போது, ஜிவா ஒரு ரெயின்கோட் அணிந்து இருப்பது போன்ற படம் ட்விட்டரில் வெளியானது. 

பின்னர், ரிஷப் பண்ட், ஜிவா இருவரும் வெற்றி கொண்டாடும் வகையில் உற்சாகமாக உரக்க கத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது. பண்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். ரசிகர்கள் பலரும் அதனைப் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்பு ஐபிஎல் போட்டிகளின் போது, ரிஷப் பண்ட்க்கு தோனியின் மகள் தமிழ் சொல்லிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பை தொடரில் ஷிகர் தவான் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளுக்கு விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. அவரது காயம் சரியாகாத பட்சத்தில் அவர் தொடரில் இருந்து விலக்கப்படுவார். அந்த நேரத்தில் தவானுக்கு பதில் விளையாட ரிஷப் பண்ட்டை பிசிசிஐ இங்கிலாந்துக்கு வரவழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.