விளையாட்டு

கோலியின் சுயநலமா ? விளாசும் நெட்டிசன்கள் !

jagadeesh

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியக் கேப்டன் விராட் கோலி 3 ரன்கள் எடுத்திருந்தபோது டிம் சவுத்தி பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், அந்த அவுட்டுக்கு ரிவ்யூ செய்து, இந்தியாவின் ஒரு வாய்ப்பையும் வீணடித்தார். இது கோலியின் சுயநலமான முடிவு என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றன.

கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் மயங்க் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய பிரித்வி ஷா 54(64) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, இந்திய அணியின் சரிவு தொடங்கியது. கேப்டன் விராட் கோலி 3 ரன்களில் ஆட்டமிழக்க, துணைக் கேப்டன் ரஹானேவும் 7 ரன்களில் நடையை கட்டினார்.

கேப்டன் விராட் கோலி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சவுத்தியின் பந்துவீச்சில் மீண்டும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் கோலியின் விக்கெட்டை அதிக முறை கைப்பற்றியவர் என்ற பெருமை சவுத்தியின் வசமே உள்ளது. இதுவரை அதிகபட்சமாக 10 முறை விராட் கோலியின் விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார்.

விராட் கோலியின் மோசமான பார்ம் தொடர்வது இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. அவர் கடைசியாக விளையாடிய 5 சர்வதேச போட்டிகளில் 3, 19, 2, 9, 15 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். விராட் கோலி மோசமான ஆட்டமும் ஒருநாள் தொடரை இந்திய அணி இழப்பதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இதுமட்டுமல்ல தொடர்ச்சியாக அவர் டிஆர்எஸ் முறையை தவறாக பயன்படுத்தி வருகிறார். எல்.பி.டபில்யூ முறை அவுட் கொடுக்கப்பட்டதில் இதுவரை அவர் 10 முறை டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியுள்ளார். இதில் இரண்டு முறை மட்டுமே அவர் தப்பியுள்ளார்.

கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு அதில் டிஆர்எஸ் முறையை கோலி தனது சுயநலத்துக்காக பயன்படுத்தியுள்ளார் என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.