நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் ஒரு போட்டியில் கூட வெல்லாதது ரசிகர்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. போட்டிகளில் வெல்லாதது ஒருபுறம் என்றால் இந்திய அணித் தலைவர் கோலியின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
விராட் கோலி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 50க்கு மேல் சராசரி வைத்துள்ளவர், எத்தகைய பந்துவீச்சாளரையும் எதிர் கொண்டு ரன்களை குவிக்கும் திறன்படைத்தவர், அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் என கிரிக்கெட் விமர்சகர்களால் புகழ்ந்துரைக்கப்படுபவர். ஆனால், நியூசிலாந்து சுற்றுப்பயணம் அவரது கிரிக்கெட் வாழ்வின் மிக மோசமான பகுதியாகவே கருதப்படுகிறது. இந்த தொடரில் டி 20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து 218 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் விராட் கோலி.
ஒரு நாள் தொடரில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் நான்கு இன்னிங்சிலும் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கோலியின் செயல்பாடு மிக மோசமாக இருந்ததாக விமர்சனத்திற்குள்ளானது. அதேபோல் தற்போதைய நியூசிலாந்து பயணமும் அவருக்கு மிக மோசமானதாக அமைந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கடந்த 22 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. இதனால் சர்வதேசத் தரவரிசையில் முதலிடத்தையும் கோலி இழந்துள்ளார்.
பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, அணியை வழிநடத்தும் விதத்திலும் நியூசிலாந்தில் அவரது செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகின. இந்தத் தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படாதது, அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பரான சஹா இருக்கையில், தொடர்ந்து மோசமாக விளையாடும் ரிஷப் பந்திற்கு டெஸ்டில் வாய்ப்பளித்தது போன்றவை கடும் விமர்சனத்திற்குள்ளாகின. இதுமட்டுமின்றி ஒவ்வொருமுறையும் விராட் கோலி டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்துவதும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் இல்லாத நிலையில் அணியின் நிலை உணர்ந்து ஆட வேண்டிய கோலி அதனைச் செய்யவில்லை என விமர்சிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள், நியூசிலாந்து பயணத்தின் போது அவர் தடுமாற்றத்தில் இருந்ததாகவே கூறுகின்றனர். விரைவில் தனது ஆட்டத்திறனை மீட்டெடுப்பதோடு, அணியை வழிநடத்துவதிலும் பக்குவமான அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.