விளையாட்டு

சென்னை டெஸ்ட்டில் விராட் கோலி அரை சதம்!

சென்னை டெஸ்ட்டில் விராட் கோலி அரை சதம்!

jagadeesh

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கேப்டன் விராட் கோலி அரைசதமடித்தார்.

சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா, ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 178 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.

இதனையடுத்து இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் ரோகித் சர்மா 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனையடுத்து சுப்மன் கில்லும், புஜாராவும் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர்.  நேற்றைய ஆட்ட நேர முடிவில் சுப்மன் கில் 15 ரன்களும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.

இன்னும் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது இந்தியா. இதில் புஜாரா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் அரை சதமடித்தார். ஆனால் அவர் தொடர்ந்து நிலைக்கவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்ஸின் 'இன் ஸ்விங்' பந்துவீச்சுக்கு போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த துணைக் கேப்டன் ரஹானேவும் ஆண்டர்ஸன் பந்துவீச்சுக்கு போல்டாகி டக் அவுட்டானார். ரிஷப் பன்ட் விரைவாக ரன் சேர்ப்பார் என நினைத்திருந்தபோது 'ஸ்லோ பால்' வீசி அவரையும் அவுட்டாக்கினார் ஆண்டர்சன்.

முதல் இன்னிங்ஸில் அசத்தலாக பேட்டிங் செய்து 85 ரன்கள் குவித்த வாஷிங்டன் சுந்தர், இம்முறையும் சிறப்பாக விளையாடுவார் என நினைத்தபோது பெஸ் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேப்டன் விராட் கோலியும், அஸ்வினும் தோல்வியை தவிர்க்க போராடி வருகின்றனர். இதில் விராட் கோலி அரை சதமடித்து விளையாடி வருகிறார். இப்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்துள்ளது.