இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. 2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற இந்திய அணி மட்டுமே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைபற்றியது. அதன் பின்பு 2011, 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலி தலைமையிலான அணி இந்திய அணி வெற்றி பெறுமா, கோலி 2014 சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்விகள் எழத் தொடங்கி இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் கோலி மொத்தமாக 134 ரன்களை மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக கோலி இப்போது எப்படி இங்கிலாந்து மண்ணில் விளையாடுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நேற்று கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரின் ஆட்டத்திறன் குறித்து பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது.
அதற்கு கோலி "என்னுடைய ஆட்டத்தை எந்த நாட்டிலும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய எண்ணம் அனைத்தும் அணியின் வெற்றிப் பாதையில் அழைத்து செல்வதில்தான் இருக்கிறது. அதற்காக ரன் அடிக்க மாட்டேன் என கூறவில்லை, நிச்சயம் ரன்களை குவிப்பேன். அதே நேரத்தில் இந்தியக் கிரிக்கெட் அணியை அடுத்தக் கட்டத்துக்கும் அழைத்துச் செல்வேன். என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் ஆரூடங்களுக்கும் பதில் சொல்வது அதில் நேரத்தை வீணடிப்பது தேவையற்ற விஷயம்" என்றார் கோலி.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் வீரர் " அவர் தனக்காக நிரூபிக்க வேண்டியதில்லை. ஆனால் உலகின் சிறந்த பேட்ஸ்மென் என்ற முத்திரை அவர் மேல் விழுந்துள்ளதால் அவர் அதனை நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆசிய பேட்ஸ்மென்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ரன்கள் குவிக்க வேண்டியது முக்கியமாகும். விராட் எல்லா இடங்களிலும் ரன்கள் குவித்துள்ளார், இங்கிலாந்து ஆட்கொள்ள வேண்டிய இறுதி இடமாகும்" என கூறியுள்ளார்.
மேலும், "விராட் நல்ல பார்மில் இருந்தால் அது ஒட்டுமொத்த அணி மீதும் தாக்கம் செலுத்தும். மற்றவர்களும் நன்றாக ஆட வேண்டும், ஆனால் விராட் நன்றாக ஆடுவது இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும். பேட்ஸ்மெனாக விராட் கோலி சரியாக ஆடவில்லையெனில் விரைவில் இந்திய அணி பெரும் சவாலைச் சந்திக்கும். எனவே விராட்டின் பேட்டிங் இந்தத் தொடரில் மிக முக்கியமானது என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.