விளையாட்டு

“முறையற்ற கருத்துகளுக்கு இங்கு இடமில்லை” - பாண்டியா குறித்து விராட் கோலி

webteam

முறையற்ற கருத்துகளுக்கு இங்கு இடமில்லை என ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலிடம் தெளிவுபடுத்தி விட்டோம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை சிட்னியில் தொடங்குகிறது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் குறித்த கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கோலி, இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை முறையற்ற கருத்துகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் எனவும் அதை இருவரிடமும் தெளிவுபடுத்தி விட்டோம் எனவும் தெரிவித்தார். 

மேலும் இரண்டு வீரர்களும் என்ன தவறு செய்தோம் என்பதையும் இது எவ்வளவு பெரிய சர்ச்சைக்குரிய விஷயம் என்பதையும் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் கருத்தை ஆதரிக்கப்போவதில்லை எனவும் அது முற்றிலும் அவர்களது தனிப்பட்ட சொந்தக் கருத்து எனவும் கோலி தெரிவித்தார். 

முன்னதாக, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர். இதற்காக சமூக வலைத்தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்காக பிசிசிஐ அவர்கள் இருவருக்கும் விளையாடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.