விளையாட்டு

கோலி டீம் வாஜ்பாய்க்கு இரங்கல்

rajakannan

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் நேற்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். வாஜ்பாய் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்தவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வாஜ்பாய் மற்றும் அஜித் வடேகர் இருவருக்கும் சேர்த்து இரங்கல் தெரிவித்தார். “இது எங்களுக்கு மிகவும் வருத்தமான நாள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முன்னாள் கேப்டன் அஜித் அடேகர் ஆகியோரின் இழப்பு எங்களுக்கு துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஷிகார் தவான் தனது ட்விட்டரில், “முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். சில அரசியல் தலைவர்களை நான் அவர்களுடைய நேர்மைக்காக எப்பொழுதும் மரியாதை செய்வேன். அவர்களுள் ஒருவர் வாஜ்பாய். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

“வாஜ்பாய் இறந்த செய்தி என்னை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மதிப்பும், கருத்துக்களும் எப்பொழுதும் இருக்கும்” என்று புஜாரா தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

“இந்தியாவிற்கு மிகவும் சோகமான நாள் இன்று. நம்முடைய சிறந்த தலைவர்களுள் ஒருவரை இழந்துள்ளோம். நாட்டின் மேம்பாட்டிற்கு வாஜ்பாய் நிறைய பங்களிப்பு செலுத்தியிருக்கிறார். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று அனில் கும்ளேவும், “இது மிகவும் சோகமான வாரம். சிறந்த தலைவர்களுள் ஒருவரான வாஜ்பாய் மறைவு இதயத்தை சுக்குநூறாக்கியுள்ளது” என அஸ்வினும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.