விளையாட்டு

“உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்” - சிஎஸ்கே ஃபேன்ஸ்க்கு டுபிளசிஸின் உருக்கமான பதிவு

kaleelrahman

சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என வீடியோ பதிவு ஒன்றை டுபிளிசிஸ் வெளியிட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக களமிறங்கி இப்படியெல்லாம் ரன் அடிக்க முடியுமா என எதிர் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் டுபிளிசிஸ். அவர் அடித்த ரன்களே அவருக்கான முக்கியத்துவத்தை சொல்லும். கடந்த சீசனில் டூபிளசிஸ் 633 ரன்கள் குவித்து சிஎஸ்கே கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும். சராசரி 45.21 ரன். 23 சிக்ஸர்களும், 60 பவுண்டரிகளுடம் விளாசி இருந்தார். 2020 ஐபிஎல் சீசனிலும் அவர் 449 ரன்கள் குவித்து இருந்தார். 

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய இவரை இன்று நடைபெற்ற மெகா ஏலத்தில் மீண்டும் சிஎஸ்கே அணி எடுக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதனால், ஏலத்தின் போது அவரது பெயர் அறிவிக்கப்பட்டது ரசிகர்கள் உற்று நோக்கி இருந்தனர். சிஎஸ்கேவும் அவரை எடுக்க போட்டி போட்டது, ஆனால், இறுதியில் பெங்களூரூ அணி டுபிளிசிஸை ஏலத்தில் எடுத்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

இந்நிலையில். டுபிளிசிஸ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் காலை வணக்கம், சென்னை அணி நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும், ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிஎஸ்கே அணியில் விளையாடியது மிகவும் மறக்க முடியாதது. சிஎஸ்கேவில் என்னுடைய நாட்களை மகிழ்ச்சிகரமாக செலவிட்டேன். எனக்கு நிறைய நினைவலைகள் இருக்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் உங்களுடன் இணைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.